Monday, August 18, 2014

சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குர்ஆன் பல வசனங்களில் ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க முடியாது என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதாம் பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்.
அப்படியே பாவம் செய்தாலும் இன்னொருவரது பாவத்தைச் சுமக்க முடியுமா? அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொசுக்கப்படுவாரா? என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.

மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.

நம் விளக்கம்:

1. ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைப் பிடிப்பதற்காகச் சென்ற போது, அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்து ஈஸா நபியைக் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். கைது செய்ய வந்தவர்களுள் ஒருவன் ஆள்மாராட்டத்தினால் ஈஸா நபி எனப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான் என்று கற்பனைக் கதையை பி.ஜே நம்புகிறார். (ஆதாரம்: 4:157 பி.ஜே மொழியாக்கம்) மேலே அவர் கூறிய படி ஈஸா நபிக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டவன், அந்தச் சம்பவத்தில் எக்குற்றமும் செய்யாதவன். இவ்வாறு அக்குற்றத்தில் சம்பந்தமில்லாத ஒருவனைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஆகாத?

2. திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தில், “ அவர் கூறினார்; நாங்கள் எவரிடத்தில் எங்கள் பொருள்களைக் கண்டு பிடித்தோமோ அவரைத் தவிர வேறொருவரை நாங்கள் பிடிப்பதிலிருந்து இறைவனிடம் அடைக்கலம் தேடுகிறோம். நாங்கள் அவ்வாறு செய்தால் அநீதி இழைத்தவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவோம். என்று வருகிறது. அதாவது குற்றவாளியை விட்டுவிட்டு அதில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பிடிப்பதைப் அநீதி இழைத்தல் என்றும் அவ்வாறு செய்யாதிருக்க அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதாகவும் இந்த வசனம் கூறுகிறது”. ஆள் மாறாட்டத்தால் வேறு ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அது அநீதி ஆகாதா?

3. அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்துதான் யூதர்களிடமிருந்து தன் நபியை காப்பாற்ற வேண்டுமா?

4. ஆள்மாறாட்டம் செய்து அப்பாவி ஒருவனைச் சிலுவையில் அறைந்து கொள்ளாமல் தன் நபியைக் காப்பாற்ற அல்லாஹ்வால் முடியாதா?

5. ஷுப்பிஹலஹும் எனும் சொற்றொடருக்கு ஆள் மாறாட்டம்தான் பொருள் என்பதை பி.ஜே திருக்குரானிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் அகராதியிலிருந்தும் தக்க சான்றுகள் தந்து நிரூபிக்க முடியுமா? எனவே இதை பி.ஜே யின் பொருள் மாறாட்டம் என்று கூறலாமா?

6. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள ஏறக்குறைய தர்ஜுமாக்களில் ஆள்மாறாட்டம் எனும் பொருளைக் காண முடியவில்லையே என்?

7. ஆள்மாறாட்டம் போன்ற இழி செயல்களை அல்லாஹ் செய்வானா?

8. ஒரு தூய நபியின் தோற்றத்தைச் இன்னொரு மனிதனுக்கு அல்லாஹ் கொடுப்பானா?

9. ஆள் மாறாட்டத்தில், சிலுவையில் அறையப்பட்டவனின் மனைவி, மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? பி.ஜே இப்படித்தான் இருப்பார் போலும்.

10. ஈஸா நபியின் உருவம் கொடுக்கப்பட்டவர், தோற்றத்தில் மட்டும்தான் மாறினாரா? உள்ளத்தாலும் மாறினாரா?

ஆதாம் பாவம் செய்தால், ஆதமுடைய பிள்ளைகள் யாவும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை என்று கூறுகிறார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265) இதில் பரம்பரை பாவம் இல்லை என்கிறார்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15-இல் அனைவரும் வெளியேறுங்கள் எனும் தலைப்பில் உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூரபட்டுள்ளது என்று பி.ஜே எழுதியுள்ளார்.

ஆதம் நபி செய்த தவறு அவரது சந்ததியில் அனைவரையும் பங்காளியாக்கிவிட்டது. இவ்வாறு கடைசி மனிதன் வரை பரம்பரைப் பாவம் பாதித்து விட்டது என்கிறார்.

இந்த சுய முரண்பாடு ஏன்? இவ்விரண்டில் எது சரி?


முன்னது சரி என்றால், பின்னது தவறாகும். எந்த அளவுக்கு என்றால், ஆதம் நபியும், அன்னை ஹவ்வாவும் செய்த பாவங்களுக்காகப் உலக மனித இனம் முழுமையும் சொர்க்கத்தை இழந்து, மண்ணில் பிறந்து வளர்ந்து, மண்ணைத் தின்று மண்ணோடு மண்ணாக மடிகிறோம். இவ்வாறு பரம்பரை பாவத்திற்கு ஆளாகி விட்டோம் என்று 100% கிறிஸ்தவக் கொள்கையை பி.ஜே நம்புகிறார் என்று பொருள். இவ்வாறு இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கையை பி.ஜே தவிடுபொடியாக்கி விட்டார்.

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது 

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது JAQH எனும் பெயரில் இயங்கிய இவர்களும் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவதாகத்தானே நம்புகிறார்கள் என நாம் கருதி, ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கே செல்லவில்லை என்ற கருத்தை எடுத்துக் கூறியபோது அதை P.J மறுத்தவாறு, வானம், வானம் என நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அந்த வார்த்தையைக் கூறவே இல்லை என பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். 

1994-ஆம் ஆண்டு விவாதத்தில் வானம் என்ற வார்த்தையை பகிரங்கமாக மறுத்த P.J ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 53 இல் ‘ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என முரண்பட்டு எழுதியிருக்கிறார். இவ்வாறு முரண்படுவது அவரது வாடிக்கையும் அதைக் கண்டு நாம் வேடிக்கை காண்பதும் புதுமையானது ஒன்றல்ல. ஆயினும் நடுநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்வோம்: ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த ஒரு ஹதீஸிலும் வராதபோது, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என நேரடிப் பொருளில் எப்படிக் கூறுகின்றீர்கள் என நாம் ஆலிம்களிடம் வினா கொடுத்த பிறகுதான் அவர்கள் தம் அறியாமையை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். இதில் P.J யும் அடங்குவார். எனவேதான், கோவை விவாதத்தில் கூட ஈஸா நபி வானில் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரால் நிரூபிக்க முடியாமற்போனது மட்டுமின்றி, ‘வானம்’ என்ற வார்த்தையை பகிரங்கமாக வாபஸ் வாங்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். 

ஆனால் இப்போது அதே P.J ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்ற முரண்பட்ட ஒரு செய்தியை ஏகத்துவ இதழில் எவ்வித ஆதாரமுமின்றி எழுதியுள்ளார். 

எந்த ஒரு சஹீஹான ஹதீஸிலும் ஈஸா(அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவார் என வரவில்லை! ஒரு வாதத்திற்காக நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருதல் என பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில், இறங்குதல், இறக்குதல் என்ற இதே சொல்லை இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான். அங்கே P.J உட்பட எவரும் நேரடியாக, வானிலிருந்து இறங்குதல், இறக்குதல் என்ற பொருளைக் கொடுக்கவில்லை. உதாரணமாக, 

கத் அன்ஸலல்லாஹு இலைக்கும் திக்ரன் ரஸுலன். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக் கூடிய இறைத்தூதரை இறக்கியுள்ளான். (65:11) 

இங்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி ‘அல்லாஹ் இறக்கியுள்ளான்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளான். ஆனால் அன்னார் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தார்களா? இல்லையே! மாறாக, P.J உட்பட இந்த வசனத்திற்கு ‘அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை அனுப்பியுள்ளான் என்றே மொழி பெயர்த்துள்ளார். (P.J மொழியாக்கம் வசனம் 65:11 பக்கம்,826 காண்க ) 

2. வ அன்ஸல லக்கும் மினல் அன் ஆமி ஸமானியத்த அஸ்வாஜ். அவன் கால்நடைகளுள் எட்டு இணைகளை உங்களுக்கு இறக்கியுள்ளான். (39:7) இந்த வசனத்தில் அன்ஸல (இறக்கினான்) என்ற சொல் வந்தபோதிலும் கால்நடைகளை வானத்திலிருந்து இறங்கியதாக யாரும் பொருள் கொடுப்பதில்லை!

3. வ அன்ஸல்னல் ஹதீத. நாம் இரும்பை இறக்கியுள்ளோம். (57:26) 

இங்கேயும் P.J இரும்பு வானத்திலிருந்து இறங்குவதில்லை என்பதை அறிந்து ‘இரும்பையும் அருளினோம்’ என உஷாராக மொழிபெயர்த்துள்ளார். (P.J. மொழியாக்கம் பக்கம் 799 காண்க). இங்கு உஷாராக இருக்கும் அவர் இதே சொல் ஈஸா (அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் நேரடிப்பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என கராராக இருக்கிறார்!

4. கத் அன்ஸல்னா அலைக்கும் லிபாஸன் என அல்லாஹ் கூறுகிறான். அதாவது நாம் உங்களுக்கு ஆடையை இறக்கினோம் என்பது இதன் நேரடிப் பொருளாகும். ஆனால் ஆடையை உங்களுக்கு ‘அருளினோம்’ என P.J தமிழாக்கம் செய்துள்ளார். (வசனம் 7:26 பக்கம் 242) 

ஆக, திருக்குர்ஆனில் அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கால்நடைகளைப் பற்றியும், இரும்பைப் பற்றியும், ஆடையைப் பற்றியும் ‘இறக்கினோம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அவ்வனைத்து இடங்களிலும் எல்லா முஸ்லிம்களும் அஹ்மதி முஸ்லிம்களைப் போன்றே வழங்குதல், அனுப்புதல், அருளுதல் என்ற பொருளையே கொடுத்துள்ளனர். இதில் நமக்கும் பிற முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படியிருக்கும்போது, இதே சொல் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என்று நேரடியான பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இதிலிருந்து இவர்கள் நுஸுல் (இறங்குதல்) என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டே ஈஸா நபி விஷயத்தில் மட்டும் சொந்த கைச்சரக்கைத் திணிக்கப் பார்க்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

ஹதீஸில் ஈஸாவைப் பற்றி நஸல (இறங்குவார்) என்ற சொல் தானே வருகிறது என்ற ஐயத்திற்கு மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலேயே நமக்கு தெளிவு கிடைத்துவிட்டது. எனினும் ஹதீஸிலும் இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான இரு உதாரணங்களை கீழே தருகின்றோம்: 

1. அன்னன் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நஸல தஹ்த்த ஷஜரத்தன். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் இறங்கினார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 7 பக்கம் 59) 

2. கான இஸா நஸல மன்ஸிலன் பீ ஸபரின் லம் யர்த்தஹில் ஹத்தா யுஸல்லீ பீஹீ ரக்அதைனி, அதாவது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தங்கிய பிறகு இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு பயணம் மேற்கொள்வார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 4 பக்கம் 19) 

ஹதீஸில் ஈஸாவுக்கு வந்துள்ள நுஸுல் என்ற சொல்தான் இந்த ஹதீஸுகளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் வந்துள்ளது. இங்கெல்லாம் முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வானிலிருந்து இறங்கினார்கள் எனப் பொருள் கொடுப்பதில்லை. இதே சொல் வழக்கு ஈஸா நபிக்காக வரும்போது மட்டும் அதற்கு நேரடிப் பொருள்தான் கொடுக்க ஆலிம்கள் துடிப்பதைக் காணும்போதுதான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக நேசம் கொண்டுள்ள நாம் துடிதுடித்துப் போகிறோம். 

‘இப்னு மர்யம் உங்களிடத்தில் இறங்கும்போது’ என ஹதீஸில் வந்துள்ளதென்றால் அதே மாதிரிதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறக்கினோம் என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். ஈசாவுக்கு நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கும் அதே பொருளைத் தர வேண்டும். தருவார்களா? தந்ததில்லை: தருவதுமில்லை: தரவும் மாட்டார்கள். அப்படியானால் ஈஸாவுக்கு வரும்போது மட்டும் நேரடிப் பருளைத் தர முற்படுவது நியாயமானதல்ல என்பதை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டவர்களால் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. இவர்களின் இச்செயல் ‘உண்மையிலேயே இது முறையற்ற பங்கீடாகும்’ (53:23) என்ற இறை வசனத்தையே நமக்கு நினைவூட்டுகிறது!

அடுத்து, ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும்போது இறை தூதராக வர மாட்டார். எனவும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 64) 

இதுவும் அப்பட்டமான பொய்யும், இட்டுக்கட்டும் ஆகும், இறை தூதராக வர மாட்டார் எனப் பொருள்படும் ஹதீஸின் அரபிச் சொல்லை இதுவரை எந்த ஆலிமும் எடுத்துக் காட்டவில்லை. P.J க்கும் நாம் சவாலாக விடுக்கிறோம். ‘இறை தூதராக வரமாட்டார்’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் எதில் இடம் பெற்றிருக்கிறது? அதன் அரபி வாசகம் என்ன? என்பதைக் காட்டத் தயாரா? இவர்களால் காட்டமுடியாது என்பதற்கு கடந்த காலமே சான்று. 

ஆனால் நடுநிலையாக சிந்திக்கும் வாசகர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்: இந்த ஆலிம்கள் கூறுவதற்கு நேர்மாறாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தோன்றவிருக்கும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, நபியுல்லாஹி ஈஸா (அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா) என ஒரு முறை அல்ல: நான்கு முறை குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 4 பக்கம் 878-882 ஹதீஸ் எண்: 5629காண்க) இந்த ஹதீஸை P.J யும் ஸஹீஹானது என ஒப்புக்கொண்டவாறு தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம்55) 

ஆனால் அதற்கு முரண்பட்டவாறு ‘நபியாக வர மாட்டார்’ என ஏகத்துவம் பக்கம் 54 இல் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவர் குழம்பிப் போயிருக்கிறார்: ஒரு நிலைப்பாட்டில் இல்லை. அல்லது தெரிந்து கொண்ட மக்களைக் குழப்ப முயற்சிக்கிறார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா எனக் கூறிவிட்ட பிறகு இதில் இரண்டாம் கருத்து கொள்வதற்கோ, இரண்டாம் கருத்து கொடுப்பதற்கோ இங்கு இடமேயில்லை. 

அது மட்டுமின்றி, ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற நபிமொழியையும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் பக்கம் 55) 

வஹி அறிவிப்பான் என்ற அரபிச் சொல்லைத்தான் P.J ‘அல்லாஹ் செய்தி அனுப்புவான்’ என மொழிபெயர்த்துள்ளார். ஆக, இந்த நபிமொழியிலிருந்து வஹி வருவது நின்று விட்டது என்ற முஸ்லிம்களின் தவறான நம்பிக்கையும் அடிபட்டுப் போகின்றது. இந்த உம்மத்தில் தோன்றும் ஈஸாவுக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அடுத்து, ஈஸப்னு மர்யம் முஸ்லிம் உம்மத்தில் தோன்றுவார் எனும் பொருள் பட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்: 

கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும். அதாவது (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார். (புகாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்: 3449) 

இந்த நபிமொழிக்கு P.J. இவ்வாறு தவறான பொருள் கொடுக்க முனைந்துள்ளார்: 

“உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும்போது, ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏகத்துவம் பக்கம் 54) 

இந்த நபிமொழியில் இரண்டு வாக்கியங்கள் அமைந்துள்ளன. ஒன்று கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் என்பது. அடுத்து வாவு (மேலும்) வந்துள்ளது. பிறகும் இமாமுக்கும் மின்கும் என வந்துள்ளது. 

அரபி மொழியில் வாவு மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றது: 1. வாவு அத்ப் (மேலும் என்ற பொருளில்) 2. வாவு கஸ்மிய்யா (சத்தியமாக என்ற பொருளில்) 3. வாவு ஹாலிய்யா (நிலையை விளக்குவதற்கு வருவது.) 

இங்கே P.J நிலையை விளக்குவதற்காக வந்த ‘வாவு’ என தவறான பொருளைக் கொடுக்க முனைத்துள்ளார். எனவே. ஈஸா நபி வேறு; இமாம் வேறு என்று அவர் தவறாக புரிந்து வைத்துள்ளதற்கேற்ப, உங்கள் இமாம் உங்களை சார்ந்தவராக இருக்கும்போது (இருக்கும் நிலையில்) ஈஸா மேலிருந்து இறங்கி வருவார் என தவறாகப் பொருள் கொடுத்துள்ளார். அதாவது இமாம் மஹ்தி உங்கள் மத்தியில் இருக்கும்போது, ஈஸா வானிலிருந்து இறங்குவார் என்ற தவறான பொருளைக் கொடுத்துள்ளார். ஆனால் இங்கு வந்துள்ள ‘வாவு’ அத்ப் எனும் வாவாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்களின் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார் என்றே பொருள்படும். அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும் ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். 

இதனை நாம் அனுமானமாகக் கூறவில்லை. ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீஸ் நமது கருத்துக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. அதில் இவ்வாறு வருகின்றது:

கய்ப அன்த்தும் இஸா நஸல பீக்குமுப்னு மர்யம் பஅம்மக்கும் மின்க்கும். பொருள்: (முஸ்லிம்களே!) உங்களுக்கு மத்தியில் ஈசப்னு மர்யம் தோன்றும் போது உங்களின் நிலை எப்படி இருக்கும்? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமத் செய்வார் என ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம்:185 ஹதீஸ் எண்:246) 

இங்கு நஸல (தோன்றும்போது) என்ற வினைச் சொல்லையும், அம்ம (இமாமத் செய்வார்) என்ற வினைச்சொல்லையும் ஒரே எழுவாயுடன் சேர்த்து ஹசரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது ஈஸப்னு மர்யம் என்பதுதான், எனவே முஸ்லிம்களே! உங்களிலிருந்து தோன்றும் ஈஸப்னு மர்யம்தான் இமாமாக இருப்பார் என்ற கருத்து நமது சுய கருத்து அல்ல. மாறாக, இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த கருத்தாகும்!

இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கின்றது: 

“உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும், நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்.” (முஸ்னத் அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411) 

இந்த ஹதீஸில் இன்பு மர்யம்தான் இமாம் மஹ்தி (நேர்வழி காட்டப்பட்ட மஹ்தி) ஆகவும், ஹகம் (தீர்ப்பளிப்பவர்) ஆகவும், அத்ல்(நீதி வழங்குபவர்) ஆகவும் இருப்பார் என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள். 

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்: 

“வரக் கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல் புகாரி அவர்கள் சைகையாகக் கூட கூறவில்லை! இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள். அவை முதல் மஸீஹ் வேறு: இரண்டாவது மஸீஹ் வேறு எனத் தீர்ப்பளித்து விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்து தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, ‘அவர் உங்களிலிருந்து தோன்றும் உங்களின் ஓர் இமாம் ஆக இருப்பார்’ என விளக்கிக் கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்........

ஆக, மர்யமின் மகன் என்ற சொல்லினால் மனதில் தோன்றுவதற்கு சாத்தியமாக இருந்த கருத்தை நீக்குவதற்காக இந்த சொற்களுக்குப் பிறகு, ‘உண்மையிலேயே மர்யமின் மகன் எனக் கருதிக் கொள்ளாதீர்கள்; பல் ஹுவ இமாமுக்கும் மின்க்கும் (மாறாக, அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார்)’ என விளக்கவுரையாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்.” (இஸாலே அவ்ஹாம், ரூஹானி கஸாயின் தொகுதி 3பக்கம்: 124) 

தொடர்ந்து கூறுகிறார்கள்: 

“மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் எனபதைத் தீர்மானிக்கும் இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும், இரண்டாம் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.” (இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 124) 

ஆம்! ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இரு வேறுபட்ட ஈசாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆலிம்கள் மறைத்து விடுகின்றனர். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தில் தோன்றிய ஈசா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 

“நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும், சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்.” (புகாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438) 

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தொன்றவிருந்த ஈஸப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றிக் கூறும்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு வேறுபடுத்திக் கூறியிருக்கிறார்கள். 

ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில் காபாவை வளம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்...........இவர் யார்? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது. (புஹாரி கிதாபுல் பிதன் பாகம் 2 பக்கம் 1376 புதிய பதிப்பு ஹதீஸ் எண் 3440 மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277) 

இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி விட்டார்கள். 

முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதிலிருந்து அவர் மூஸா வின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் தஜ்ஜாலின் குழப்பம் மிகுந்த காலத்தில் தோன்றுவதாகக் கூறப்பட்டதிலிருந்து அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்திவிட்டார்கள். 

அடுத்து ஈஸா(அலை) அவர்களின் பணிகளைப் பற்றி புகாரி 2476, 3448, 3449 ஆகிய நபிமொழிகளில் வருகின்ற முன்னறிவிப்புகளுக்கும் வழக்கம் போல் எல்லா மௌலவிகளும் பொருள் கொடுப்பதைப் போன்றே பி.ஜே யும் பொருள் கொடுத்து தமது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.! உதாரணமாக, அவர் சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொள்வார்: ஜிஸ்யா வரியை நீக்குவார்: வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும் என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு இவற்றிற்கெல்லாம் நேரடியான பொருளை கொடுத்துள்ளார். 

இவ்வாறு நேரடி பொருள் கொடுத்தல் இந்த ஹதீஸுகள் அனைத்தும் அனர்த்தமாகிவிடும். மார்க்கத்தில் எவ்வித பலவந்தமும் இல்லை என்ற வசனம் திருக்குர்ஆனில் இருக்கும்போது அவர் எப்படி சிலுவையை முறிப்பர்? அது பலவந்தமாகாதா? அப்படியே அவர் சிலுவைகளை முறிக்கும் பணியில் அவர் ஈடுபட்டாலும் கிறிஸ்தவர்களால் மீண்டும் சிலுவைகளை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன? அவ்வாறே பன்றிகளைக் கொல்லுதல் என்பது ஒரு நபியின் கண்ணியத்திற்கு இணக்கமான செயலா என்ன? உலகத்திலுள்ள பன்றிகளை கொல்வதற்கே அவருக்கு நேரம் போதாத போது பிற மார்க்கப் பணிகளை செய்ய அவருக்கு எங்கிருந்து நேரம் இருக்கும்? ஆதமின் மகனின் பேராசையைப் பற்றிக் குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள், மனிதனின் பேராசையை மண்ணறையின் மண்தான் நிறைவேற்ற முடியும் எனக் கூறியிருக்கும் போது ‘வரவிருக்கும் மஸீஹ் செல்வத்தை வாரி வழங்குவார்; அதனை எவரும் வாங்க மாட்டார்’ என்ற இந்த ஹதீஸ் அதற்கு முரண்படுகிறதே? இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இதற்கு நேரடியானப் பொருள் கொள்ள முடியாது; இவை உவமையாகக் கூறப்பட்டவை என்பதை சாதாரண முஸ்லிமாலும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு விளக்கமளித்தவாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 

“இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வரும் போது சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொல்வார். ஒற்றைக் கண் தஜ்ஜாலைக் கொல்வார்; எந்த காபிர் வரை அவருடைய மூச்சுக் காற்று சென்றடையுமோ அவர் உடனே மரணித்துவிடுவார் என்பதாகும். எனவே இந்த அடையாளத்திற்கு ஆன்மீகமாகக் கொள்ளப்பட்ட உண்மையான கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை மதத்தின் மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களில் கீழ் போட்டு நசுக்கிவிடுவர். மேலும் எவர்களிடம் பன்றியின் வெட்கம்கெட்ட தன்மையும், அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின் மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்.”(இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 142)

இயேசு வந்துவிட்டார் -1


அசன் அபூபக்கர்

இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 

இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 

‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 

“இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 

எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே..... அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 


‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 

மேலும். ‘........... அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 

மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.

கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘............உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக........’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்..........’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 

மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 

இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 

இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 

இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். மேலும் உனது உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை அறிகின்ற்றவன் நீ ஒருவனே. 

“எனது இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என எனக்குக் கூற நீ கட்டளையிட்டதையல்லாமல் வேறெதனையும் நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களோடு இருந்தவரை அவர்களுக்கு நான் ஒரு சாட்சியாவேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய். மேலும் நீயே அனைத்தையும் கவனிப்பவனாவாய்! (5:117,118) 

‘ஒட்டக் கூத்தருக்கு இரட்டைத் தாழ்பாள் என்று கூறப்படுவது போன்று இந்த வசனம் நஜாத் ஆசிரியரின் இரண்டு கூற்றுகளையும் அடியோடு தகர்த்து விடுகிறது. இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதையும் அவர்கள் திரும்ப வரபோவதில்லை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கிவிடுகின்றது. “நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொற்றொடர், ஈஸா நபியின் சமுதாயம் இறைவனுக்கு இணைவைப்பதற்கு முன்பே அதாவது ஈஸா நபியையும் அவர்களுடைய தாயாரையும் இரு தெய்வங்களாக எடுத்துக் கொளவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே ஈஸா நபியின் சமுதாயம் இணை வைத்தலில் இறங்கிவிட்டது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. எனவே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் மரணித்துப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். 

அடுத்து ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற கருத்தும் மிகத் தவறானது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து புலனாகிறது. அவர்கள் அவ்வாறு வருவதாயிருந்தால் அவர்களுடைய சமுதாயம் இறைவனுக்கு இணை வைப்பதையும், அவர்களையும் அவர்களுடைய தாயாரையும் கத்தோலிக்கர்களும் மற்றவர்களும் வணங்கிவருவதையும் அவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அவர்களால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று இறைவனிடம் எவ்வாறு கூறமுடியும்? மேற்கண்ட இறைவசனத்திலோ அவர்கள் அந்தச் சமுதாயத்தினரோடு இருந்தவரை அவர்கள் இணைவைத்தலில் ஈடுபடவில்லை என்று கூறுவதாக வருகிறது. எனவே, ஈஸா நபியின் சமுதாயம் இணைவைத்தலில் ஈடுபடுவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துபோனார்கள் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதை உணரலாம். 

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள் என எப்படியாவது எடுத்துக் காட்டவேண்டும் எண்ணமுள்ளவர்கள் இந்தத் திருமறை வசனத்திலுள்ள ‘பலம்மா தவபைத்தனி’ என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்த பின் எனப் பொருள் தருவதற்குப் பகரமாக வெகு தந்திரமாக, நீ என்னை (உடலுடன்) கைப்பற்றியபின்’ என்று பொருள் கூறுவார்கள். இந்த தவப்பி என்ற சொல்லுக்கு மரணிக்க செய்தல் அல்லது ரூஹை அதாவது உயிரைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். 

இது தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

உலகில் அரபு நாடு உருவாகி அங்கு அரபி மொழி வழக்கில் வந்த நாள் முதல் இதுவரை வந்த எந்த உரையிலிருந்து அது புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் ‘தவப்பி’ என்ற சொல்லுக்கு உடலைக் கவர்தல் என்ற பொருள் தரப்பட்டிருந்த ஓர் உதாரணத்தை யாராலும் காட்டமுடியாது. மாறாக, தவப்பி என்பது இறைவன் மனிதனுக்கு இழைக்கின்ற செயலாக கூறப்பட்ட இடங்களிலெல்லாம் அதற்கு மரணிக்கச் செய்தல் உயிரைக் கவர்கள் என்ற அர்த்தங்களே தரப்படுகின்றன. உடலைக் கவர்தல் என்ற அர்த்தம் எங்கும் காணப்படவில்லை. எந்த அகராதியிலும் நாம் தரும் அர்த்தத்திற்கு மாற்றமான அர்த்தம் தரப்படவில்லை. 

எவராவது, திருக்குரானிலிருந்தோ அல்லது நபி மொழிகளிலிருந்தோ அல்லது அரபி மொழிக் கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தோ மேற்கண்ட சொல்லுக்கு மரணிக்கச் செய்தல், உயிரைக் கவர்தல் என்பதைத் தவிர வேறு பொருள் உண்டு என்பதற்கு உதாரணம் காட்டினால் அவருக்கு எனது சொத்தில் ஒரு பகுதியை விற்று ஆயிரம் ரூபாய் தருவேன் என இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். (இஸாலே ஔஹாம் – பக்கம் 603) 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த சவாலை அவர்களின் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாரும் ஏற்கவில்லை. இதிலிருந்து இந்த ஆலிம்சாக்கள் உண்மையை மறைத்து இட்டுக்கட்டிப் பொருள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்த “பலம்மா தவபைத்தனி’ – நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொல்லை அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் நாம் கூறும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் மேற்கண்ட ஆயத்தைக் குறிப்பிட்டே கூறியுள்ளார்கள். புஹாரி ஷரீபில் இவ்வாறு காணப்படுகிறது:-

இறுதி நாளில் நான் (நபி பெருமானார் (ஸல்) அவர்கள்) ஹவ்ல் கவ்ஸரில் நிற்கும்போது சிலர் என் முன் காணப்படுவார்கள் அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களைப் பார்த்து நான் உஸைஹாபி, உஸைஹாபி (இவர்கள் என் தோழர்கள்) என்று உரத்த குரலில் கூறுவேன். அப்போது, இவர்கள் உங்களுடைய காலத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் இஸ்லாத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்படும். அதற்கு நான் இறைவனின் அந்த நல்லடியாரான ஈஸா நபி கூறியிருந்ததைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன், ஆனால் (பலம்மா தவப்பைத்தனி) நீ என்னை மரணிக்கச் செய்தபின் நீயே அவர்களைக் கண்காணிக்கின்றவனாக இருந்தாய் என்று கூறுவேன். (புஹாரி, கிதாபுத் தப்ஸீர்) 

“பலம்மா தவபைத்தனி” என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்தபின் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை. இதை நபி பெருமானார் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதனைப் படித்தப்பிறகும் ஒருவர் அந்த சொற்றொடருக்கு வேறு அர்த்தம் இருப்பதாகக் கூறுவாரேயானால் அவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தை மறுக்கின்றவர் ஆகிறார். எனவே அவருடன் தொடர்ந்து விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

இப்படி, பல்வேறு கோணங்களில் ஈஸா நபியின் மரணம் திருக்குரானால் உறுதி செய்யப்படுகிறது. இந் நிலையில் ‘நஜாத்’ ஆசிரியரைப் போன்றவர்களுக்கு குட்டையைக் குழப்புவதை தவிர வேறு வழியில்லை! ஈஸா நபி உயிருடன் உள்ளார் எனபதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருவதற்குப் பகரமாக அர்த்தமற்ற சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் வாசகர்களைத் திசை திருப்பவே அவர் முயன்றிருக்கிறார். “ஹஸரத் ஈஸா நபி (அலை) சிலுவைச் சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன? நபி கோழையாவார்களா? என்று அவர் கேட்கிறார். 

திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றினை படித்திருந்தால் அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையாவது படித்திருந்தால் அதுபோன்ற அபத்தமான கேள்வியை நஜாத் ஆசிரியர் கேட்டிருக்கவேமாட்டார். பொதுவாக சொந்த நாட்டை துறந்து வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்வது நபிமார்களின் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. எதிரிகள், அவர்களின் அநியாயச் செயல்களில் எல்லை மீறிப் போகும்போது அல்லது நபிமார்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்போது அந்த நபிமார்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இது அறிவுடமையே தவிர கோழைத்தனம் அன்று ஏனெனில் அந்த நபிமார்கள் உயிர்வாழ்ந்திருந்தால் தான் இறைவன் அவர்கள் மீது சுமத்திய பொறுப்புகளை நிறைவேற்றிடமுடியும். 

இந்தப் பொது விதிக்கு நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூட உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். மக்காவின் ‘காபிர்’கள் நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்துவிட திட்டமிட்டு அவர்களுடைய வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்கள் இரவோடிரவாக மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யவில்லையா? 

நஜாத் ஆசிரியரைக் கேட்க்கிறோம், இஸ்ரவேலர்களுக்கு இறை தூதராக வந்த ஈஸா நபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்றியதாகக் கூறுகின்றீர்களே. அதே நிலை, அகில உலகிற்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டபோது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்தவில்லையே ஏன்? ஈஸா நபியை நேசித்த அளவுக்கு இறைவன் நபி பெருமானாரை நேசிக்கவில்லையா? அல்லது கிருஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா நபி (நவூதுபில்லாஹ்) இறைவனின் நேச குமாரன் என்பதுவும் உங்களின் எண்ணமா? 

ஏனைய நபிமார்களுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அவர்களை இந்த பூமியிலேயே காப்பாற்றிய இறைவன் ஈஸா நபியை மட்டும் வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? வானத்திற்கு உயர்த்த இறைவனுக்கு வல்லமையில்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறோம், ஏன், பூமியிலேயே அவர்களைக் காப்பாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு இல்லையா? தவ்ர் குகையில் மறைந்திருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்களையும் ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களையும் ஓர் அற்பப் பிராணியான சிலந்தியைக் கொண்டு எதிரிகளிடம் பிடிபடாது இறைவன் காப்பாற்றினான். இத்தகைய வல்லமை மிகுந்த இறைவன் ஈஸா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவன் வகுத்துள்ள நியதிகளை தவிடு பொடியாக்கி வானத்திற்கு உயர்த்தியிருப்பானா? நிச்சயமாக அவன் அவ்வாறு செய்யவில்லை! மாறாக, ஏனைய நபிமார்களைப் போல் ஈஸா நபியையும் இப்பூமியிலே காப்பாற்றினான். இது குறித்து இறைவனே கூறுவதைப் பாருங்கள்:- 

“மேலும் நாம் மரியமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். நீரூற்றுகளுள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்” (23:51) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஈஸா(அலை) அவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்ட இடம் பற்றி, 

ரப்வ – மலைப் பிரதேசம் 

மயீன் – நீரருவி நீரூற்று நிரம்பிய இடம். 

தாது ‘கரார்’ – மக்கள் வசிக்குமிடம் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இந்த வர்ணனைகள் காஷ்மீருக்குப் பொருந்துமா? வானத்திற்கு பொருந்துமா? 

அடுத்து, ஈஸா நபி (அலை) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ சென்றதாக அதாவது தமது சொந்த நாட்டைத் துறந்து சென்றதாக நபிபெருமானார் (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள். 

அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா நபி அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான், “ஈஸாவே நீர் மற்றவர்களால் அறிந்து கொள்ளப்படாமலும் துன்புருத்துதளுக்கு இலக்காகாமலும் இருக்க இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ‘ஹிஜ்ரத்’ செய்வீராக” (கன்ஸுல் உம்மால்) 

இவற்றிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு தமது நாட்டைத் துறந்து சென்றார்கள் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டும். 

ஈஸா நபி (அலை) அவர்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் பரவலாக வசித்துவந்த இஸ்ரவேல் இன மக்களுக்கு இறைத்தூதை எட்டவைத்து, இறுதியாக காஷ்மீர் வந்தடைந்தார்கள், அங்கெ தமது 120 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள் என்பதையெல்லாம் இறையறிவிப்பின் அடிப்படையிலும் ஹஸரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது மஸீஹ் ஹிந்துஸ்தான் மேய்ன் (தமிழில் இந்தியாவில் இயேசு) என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, ஈஸா (அலை) அவர்கள் இந்தியா வந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன என முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மற்றும் நல்லரிஞர்களும்கூட கூறியுள்ளார்கள். 

இவற்றை மறுக்க இயலாத நிலையில் நஜாத் ஆசிரியர், சிலுவையில் அடிக்கப்பட்டவர் வேறொருவர். அவரே “காஷ்மீருக்கும் ஓடிப் போயிருக்கலாம். பின்னர் மாண்டிருக்கலாம். அவர்களின் கல்லறை காஷ்மீரில் இருப்பதாக எழுதியிருக்கலாம்” என்று வரைந்துள்ளார். இவற்றிலிருந்து இந்தச் சம்பவங்களலெல்லாம் உண்மை, ஆனால் ஆள்தான் வேறு என நஜாத் ஆசிரியர் கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். அதாவது ஈஸா நபியை கொல்ல முயற்சித்த யூதர்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் பல்வேறு இனங்களைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் நல்லரிஞர்களும் கூட ஏமாந்து போனார்கள் தாம் மட்டும்தான் அது உண்மையான ஈஸா அல்ல அது வேறொரு நபர் என்று கண்டு பிடித்துள்ளதாக நஜாத் ஆசிரியர் கூற விழைகிறார். அப்படியானால் அதற்க்கான ஆதாரத்தை தரட்டும்! ஓர் “அற்புதகரமான ஆராய்ச்சியாளரை” உலகம் கண்டுகொள்ளட்டும். 

ஆனால் இறைவசனங்களுக்கெதிராக, நபிமொழிக்கெதிராக யாராலும் எந்த சான்றையும் காட்ட இயலாது! ஏனெனில் அது உண்மையே உருவானவை. “உண்மைக்கு எதிராக யூகங்கள் எந்தப் பயனும் அளிக்காது” (10:37) என்பதற்கேற்ப உண்மையின் முன்னால் எந்தப் பொய்யும், யூகமும், கற்பனையும் நிற்கயியலாது.

ஈசா நபி (அலை) அவர்களின் மரணமும் 'நஜாத்' ஏட்டின் மூடநம்பிக்கையும் - 2


திருக்குர் ஆனின் பல்வேறு சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் வசனங்கள் ஒன்றை ஒன்று தெளிவுபடுத்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான். விவாதத்துக்குரிய திருமறை வசனமான "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் நஜாத் ஆசிரியரோ முதலில் உயர்த்துதல் நிகழ்ந்துவிட்டது மரணம் பின்னால் நிகழும் என்கிறார். இந்த தலை கீழ் பாடத்தை அறிவுள்ள எவரும் ஏற்க்கமாட்டார். இப்படி திருமறை வசனத்தை புரட்டுவதோடு நின்றுவிடாது அதன் சொற்களுக்கு தவறான அர்த்தமும் நஜாத் ஆசிரியர் தருகிறார். மேற்கண்ட வசனத்திற்கு இவர் தரும் அர்த்தத்தை பாருங்கள். "ஈஸாவே நான் உம்மைக் கைப்பற்றுவேன் இன்னும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன்" என அவ் வசனத்தை இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல இப்போதுள்ள திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பாளர்களும் இவ்வாறே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் உள்ள இமாம்களும் இஸ்லாமிய நல்லறிஞ்சர்களும் நாம் மொழி பெயர்த்துள்ள வண்ணமே மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த திருவசனத்தில் இடம் பெற்றுள்ள 'முதவபீக' என்ற சொல்லுக்கு 'நான் உம்மை மரணிக்க செய்வேன்' என்பதே சரியான பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லுக்கு 'முமீதுக' அதாவது, நான் உம்மை மரணிக்க செய்வேன் என்ற பொருள் தந்துள்ளதாக ஸஹீஹுல் புகாரியில் காணப்படுகிறது. எல்லா அறபி மொழி வல்லுனர்களும் இந்தச் சொல் மேற்கண்ட வசனத்தில் கையாளப்பட்டிருப்பது போல் கையாளப்பட்டிருந்தால் அதன் பொருள் 'மரணிக்கச் செய்தல்' என்பதல்லாமல் அதற்க்கு வேறு எந்த அர்த்தமும்கொள்ளயியலாது என தெளிவு படுத்துயுள்ளனர். எடுத்துக்காட்டாக அல்லாமா அபுல் பகா அவர்கள் தமது 'குல்லிய்யாத்' எனும் அகராதியில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளதை கூறலாம்.

"தவப்பீ' யின் பொருள் மரணிக்கச் செய்வதும் உயிரை வாங்குவதுமாகும். இவ்வினைப் பெயர் 'வபாத்' எனும் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்"

மேலும் 'தவப்பீ' என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருளில்லை என்பதை இமாம் மாலிக் (ரஹ்) , இமாம் புகாரி (ரஹ்) போன்றோர் உறுதி செய்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி - அத்தியாயங்கள் 'தப்ஸீர்' மற்றும் 'பதல் கல்க்' )

திருக்குரானில் இந்த தவப்பா என்ற சொல் இருபத்தைந்து இடங்களில் காணப்படுகிறது. (3"194. 4:16, 7:127, 8:51, 10:47, ஆகியன காண்க) இதில் இருபத்து மூன்று இடங்களில் இச் சொல் மரணத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு இடங்களில் கூட "ரூஹை (உயிரைக்) கைப்பற்றுதல் " என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க இந்தச் சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்றதொரு வினோதமான அர்த்தத்தை இவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றார்கள்?

பதஹுல் பயான் எனும் விரிவுரை நூலில் காணப்படுவது போன்று உண்மையில் இது, ஈஸா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கையை தமது உள்ளத்தில் வளர்த்துக் கொண்ட கிறிஸ்தவ வழி வந்த முல்லாக்கள் உருவாக்கிய அனர்த்தமேயொழிய அந்தச் சொல்லுக்கு இவர்கள் தரும் அர்த்தம் இல்லவேயில்லை!

'ரஃப அ' என்ற சொல்லுக்கு உடலுடன் உயர்த்துதல் என்ற பொருள் உண்டு என்பதற்கோ 'தவஃப்பி' eன்ற சொல்லுக்கு 'உடலைக் கைப்பற்றுதல்' என்ற பொருள் உள்ளது என்பதற்கோ அரபி மொழி இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டையோ அகராதியிலிருந்து ஆதாரத்தையோ தராது வெறும் குதர்க்க வாதங்களால் குட்டையை குழப்புகிறார் நஜாத் ஆசிரியர்.

'ரஃப அ' என்ற அரபிச் சொல் குரானிலும் ஹதீதிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்து பிரயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை " என (பக்கம் 16 இல்) கூறும் அவர், ஈசா (அலை) வர்களைப் பொறுத்தவரை அச் சொல் "உடல் உயர்வு" என்று பொருள் படும் என்று கூறுகிறார். இதை யார்தான் ஏற்க்க முடியும்? ஏனையோரைப் பற்றி ஏன், எம்பெருமானார் (ஸல்) வர்களைப் பற்றி கூட குறிப்பிடப்படும் போது அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தமாம். ஈசா நபியைப் பற்றி வரும் போது மட்டும் அதற்க்கு தனி அர்த்தமாம். இது போன்ற வாதத்தை படிப்பற்றவன் கூட நம்பமாட்டானே !

ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்க வழியில்லாத காரணத்தால் ஈசா நபி அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதற்கு நாம் காட்டிவரும் ஆதாரங்களை நஜாத் ஆசிரியர் மறுக்க முயல்கிறார். முதலில் இவர் தமது நம்பிக்கைக்கு தெளிவான ஆதாரங்களால் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே நம்மால் காட்டப்படும் ஆதாரங்களை மறுக்க முயல வேண்டும். ஆனால் அவரோ ஆதாரம் 2,3 என தலைப்பிட்டு நம்முடைய ஆதாரங்களை தன் மனம் போல் மறுக்கின்றார். இது விவாத முறையன்று.

என்றாலும் இல்லாத சான்றை இவரிடம் கேட்பதில் என்ன பயன்? எனவே இவரின் மறுப்புகளை இனி பார்ப்போம்.

ஈசா நபி (அலை) அவர்களின் இயற்க்கை மரணம் குறித்து திருக்குரானில் காணப்படும் வசனங்களில் ஒன்று இவ்வாறு அமையப்பற்றுள்ளது :-

மர்யமின் மைந்தர் மஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை நிச்சயமாக (அவரைப் போன்ற) தூதர்கள் அவருக்கு முன்னால் காலஞ்சென்று போனார்கள். மேலும் அவருடைய தாயார் ஓர் உண்மைமிக்கப் பெண்ணாவார். அவர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். (இவற்றிலிருந்து) அவர்கள் (ஈசா நபியை இறைவனாகக் கருதுபவர்கள்) எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள் என்பதை காண்பீராக. (5:76)

நஜாத் ஆசிரியர் மறுப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள நூலான "ஈசா நபி (அலை) அவர்களின் மரணம்" என்ற நூலில் இத் திருக்குர்ஆன் வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. :-

இந்த ஆயத்தில் ஈசா நபியின் இறப்பு பற்றி மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை பாருங்கள். இங்கு முதலாவதாக ஈசா நபி ஓர் இறைத்தூதறேயன்றி வேறில்லை என்று கூறியதற்குப் பிறகு அவருக்கு முன் தோன்றிய எல்லா நபி மார்களும் காலஞ்ச சென்று போனார்கள் என்று கூறப்படுகிறது. இது ஈசா நபியின் மரணத்தை உறுதி செய்யும் மறுக்கயியலாத ஒரு சான்றாகும். திருக்குரானின் இந்த நடைக்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். ஸைத் ஒரு மனிதனேயன்றி வேறில்லை. எல்லா மனிதர்களும் மண்ணினால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினால் ஸைத்தும் மண்ணினால் படைக்கப்பட்டவர் என்பதே அதற்குப் பொருள். அது போன்று ஈசா நபியின் மரணம் மேற்கண்ட ஆயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லை என்றால் ஈசா நபியை ஏனைய இறைத் தூதர்களிலிருந்து வேறுபட்டவராக இங்கு காட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் தொடர்ந்து, ஈசா நபியின் தாயார் புனிதவதியாக இருந்தார். எனவும் அவர்களிருவரும் உணவருந்தி கொண்டிருந்தார்கள் எனவும் விளக்குகின்றது.

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஈசா நபி மரணிக்காது உயிருடன் இருக்கிறார் என்பது உண்மையானால் அவரைப் பற்றி அவர் உணவருந்திக்கொண்டிருந்தார் என இறந்த காலத்தில் ஏன் கூறப்பட்டிருக்கிறது? அவ்வாறில்லாமல் அவரையும் அவரது தாயாரையும் இவ் விஷயத்தில் வேறு படுத்தியல்லவா கூற வேண்டும். அதாவது மர்யம் (அலை) அவர்கள் உணவருந்தியிருந்தார்கள் என்றும் ஈசா நபி உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றுமல்லவா கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை. அவர்கள் இருவரும் உணவருந்தியதை கடந்த கால நிகழ்ச்சியாகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தெளிவான விளக்கத்திற்கு நஜாத் ஆசிரியரின் விமர்சனத்தைப் பாருங்கள்.

"காதியானிகளின் இந்த வினோதமான விளக்கத்திற்கு காரணம் ஒன்று அவகளின் விவேகமின்மையாக இருக்கவேண்டும்: அன்றி அறிந்தும் மக்களை மடையர்களாக்கி தங்களின் சுய நலத்தைப் பேணிக்கொள்ளும் வேடமாக இருக்க வேண்டும். ஈசா (அலை) இறந்தது விட்டார்கள் என்றால் அல்லாஹ் அதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி அறிவித்திருக்கலாமே! இப்படி சுற்றி வளைத்துச் சொல்லி காதியானிகளை திண்டாட விட்டிருக்க்வேண்டியதில்லையே!"

நஜாத் ஆசிரியர் இறைவனுக்கே கட்டளையிடுவார் போலிருக்கிறது. யூத இனமான இஸ்ரவேலருக்குத் தூதராக வந்த ஒருவர் இறக்காமல் இருக்கிறார் என இவர் முட்டாள்தனமாக நம்புவாராம். அவ்வாறு இல்லையென்று தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி சுற்றி வளைக்காமல் இறைவன் அறிவிக்க வேண்டுமாம். மனிதானாகப் பிறந்த எவனுக்கும் ஒரு குறுகிய வாழ்விற்குப் பிறகு இறப்பு ஏற்ப்படும் என்பது மடையனுக்கு கூட சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஈசா நபி ஓர் இறைத்தூதர் என்றாலும் அவரும் ஒரு மனிதரே எனவே அவர் இறந்துவிட்டார் எனக் கூறவேண்டிய அவசியமில்லை. நஜாத் ஆசிரியர் பேதமைத்தனமாக நம்புவது போன்று ஈசா நபி உயிருடன் இருந்தால்தான் 'அந்த அற்புதமான விஷயம் பற்றி அல்லாஹ் திருக்குரானிலே தெளிவாக அறிவித்திருக்க வேண்டும்.

நம்மிடம் வந்து ஈசா நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களிடம் நாம் இவ்வாறு கூறுவது வழக்கம். மனிதன் இறப்பதென்பது இயற்க்கை நியதி அதற்க்கு ஆதாரம் காட்டவேண்டியதில்லை. ஆனால் மனிதராகிய ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறக்காது இருக்கிறார் என்று நீங்கள் கூறுவதென்றால் அதுவே வினோதம். அதற்க்கு நீங்கள்தான் ஆதாரம் காட்டவேண்டும்.

எனவே நஜாத் ஆசிரியரிடம் கேட்போம் ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத சுற்றிவளைக்காத தெளிவான ஆதாரத்தைத் தாருங்கள். இவ்வாறு அவரைக் கேட்க நஜாத் ஏட்டின் ஒவ்வொரு வாசகரும் கடமைப் பட்டவராவார்.

ஏனெனில், ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்ற கொள்கை தவ்ஹீதிற்கு எதிரானது. எவ்வாறெனில் மேற்கண்ட இறைவசனத்திலும் இன்னும் பல வசனங்களிலும் இறைவன் தனக்கு இணையாக வணங்கப்படுபவர்கள் எல்லாம் மரணித்துப் போனவர்கள் என்பதை விளக்கி தனது "தவ்ஹீத்" நிலையை எடுத்துக் காட்டுகின்றான். மேற்கண்ட வசனத்தில் இறைவன் ஈசா நபியை ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதராக - உணவு உண்டு வாழ்ந்த ஒருவராக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றான். மேலும் அவர்ட் சாதாரண மனிதரைப் போன்று "உணவருந்திக் கொண்டிருந்தார்"என்று கூறி அவர் இறந்து போனார் என்பதை மீண்டும் உறுதி செய்து அவர் கடவுள் இல்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கின்றான்.

திருக்குரானில் இறைவன் இவ்வாறும் அறிவித்துள்ளான் :-

அல்லாஹ்வைத் தவிர்த்து யாரை அவர்கள் (இணைவைப்பவர்கள்) அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் படைக்கவில்லை ஆனால் அவர்கள் தாம் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணித்துப் போனவர்கள்: உயிருள்ளவர்கள் அல்ல மேலும் அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். (16:21,22)

இந்த வசனத்தில் இறைவன் தனது ஏகத்துவ நிலைக்குச் சான்றாக கடவுளாக அழைக்கப்படுகின்றவர்களின் மரணத்தையே கூறுகின்றான். இன்று பெரும் பான்மை மக்களால் கடவுளாக அழைக்கப்படுகின்றவர் ஈசா நபி ஆவார், அப்படி அழைக்கப்படுகின்றவர், மரணித்துப் போனவர் என்றும் மரமண்டைகளில் ஏறும் வண்ணம் உயிருள்ளவர்கள் அல்ல என்றும் இறைவன் கூறுகின்றான். ஆனால் நஜாத் ஆசிரியரைப் போன்றவர்கள், இல்லை இல்லை ஈசா நபி உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறி இறைவனின் இந்த வார்த்தைகளை மறுக்கின்றனர். இது தவ்ஹீதிற்கு இறைவன் தரும் சான்றை மறுப்பது மட்டுமல்ல தவ்ஹீதையே மறுப்பதாகும். எனவே ஈசா நபி உயிருடன் இருக்கிறான் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற ஒன்றாகும். ஈசா நபி பிரச்சனை அவசியமற்றது என்று கூறுபவர்கள் இதனை எண்ணிப்பார்க்கவேண்டும். நஜாத் ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் முடிவு காண நஜாத் ஆசிரியரை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் தம்மை தவ்ஹீது வாதிகள் என்று வாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இவ்வாறு வரைகிறார்:- "இந்த இறை வசனம் மூலம் ஈசா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூய உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவர்களா? மரணமற்றவர்களாயின் அல்லாஹ்விற்கு இணையாகுமே என காதியானிகள் கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம்." இவ்வினாவிற்கு விளக்கமாகவே, "ஈசா (அலை) அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு மரணமில்லை என்று எண்ணுகிறீர்களா? மற்ற நபிமார்கள் இறந்ததுபோல் ஈசா(அலை) அவர்களும் மரணிப்பவர்களே."

நாம் தந்துள்ள தெளிவான சான்றை இவர் எப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து மறுக்கிறார் பாருங்கள். ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என ஆரம்பகால முஸ்லிம்கள் நம்பியிருந்தால்தானே அவர் மரணித்துப் போவாரா மாட்டாரா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்க முடியும்? எனவே ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்ற நம்பிக்கை ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருந்தது என்பதற்கு முதலில் இவர் ஆதாரம் காட்ட வேண்டும் அதன் பிறகே இதுபோன்று வாதிக்கவேண்டும்.

மேற்கண்டவாறு கூறுவதன் மூலம் ஆம் திருவசனம் ஈசா நபியின் மரணம் பற்றியது என்பதை நஜாத் ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று நாம் கூறுகின்றோம் அவரோ இன்மேல் தான் நிகழும் என்கிறார். இந்த கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆன் என்ன தீர்ப்பளிக்கிறது பார்ப்போம்.

முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் (3:145)

ஈசா நபி நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஒரு நபி, அத்தகு நபிமார்கலேல்லாம் காலஞ்சென்று போனார்கள் என தெளிவுபடுத்துகிறது இந்தத் திருவசனம். இந்த வசனத்தைப் படித்த, அறிவுள்ள எவரும் ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நஜாத் ஆசிரியரைப் போன்ற குழப்பவாதிகளோ திருக்குர்ஆன் ஆயத்தை திரித்துக் கூறி மக்களை ஏமாற்றவே செய்வர். ....."தூதர்கள் காலஞ்சென்று போனார்கள்." என்று இருப்பதை "தூதர்கள் பலர் சென்று போனார்கள்" என்று இல்லாததை இட்டுக் கட்டி நஜாத் ஆசிரியர் (பக்கம் 24 இல்) கூறுகிறார். இந்த ஆயத்தில் 'பலர்' என்று பொருள்படும் பஃள என்ற சொல் இல்லவே இல்லை. இதிலிருந்து யார் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்பதை வாசகர்கள் தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஈசா நபி அவர்கள் இறந்து போனது சந்தேகத்திற்க்கிடமின்றி தெளிவாகியிருக்கையில் அதனை ஏற்காது, இந்த 3:144 வசனம் இறங்கும் போது நபிபெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருந்தது போலவே 5:75 வசனம் இறங்கும் போது ஈசா நபி உயிரோடு இருந்தார் என்ற ஒரு அபத்தமான ஒரு வாதத்தை நஜாத் ஆசிரியர் எடுத்து வைக்கிறார். ஈசா நபிக்கு முன்னால் உள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனத்தை படித்த பிறகும் ஈசா நபி இறந்தார்களா என்ற சந்தேகம் எழுமானால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனம் அந்தச் சந்தேகத்தை அடியோடு போக்கிவிடுகிறது.

இது குறித்து அல்லாஹ் மீண்டும் தெளிவு படுத்தியிருப்பதை பாருங்கள்.

மனிதர்களேயன்றி வேறெவரையும் நாம் உமக்கு முன்னர் (தூதர்களாக) அனுப்ப வில்லை, அவர்களுக்கே வஹீ அனுப்பியிருந்தோம் .......... ......... மேலும் உணவருந்தாததும் நிலைத்து வாழக்கூடியதுமான உடலை நாம் அவர்களுக்கு தரவில்லை. (21:8,9)

இதிலிருந்து ஈசா நபி உணவருந்தாது ஒரு நீண்ட காலம் உயிர் வாழ்கிறார் என்ற நஜாத் ஆசிரியரின் வாதம் முழுக்க முழுக்க தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தையும் இதற்க்கு முன்னால் குறிப்பிட்டுள்ள இரண்டு வசனங்களையும் படித்தறிந்த பிறகும் ஒருவர் ஈசா நபி மரணிக்கவில்லைஎன வாதிப்பாரேயானால் அவர் ஈசா நபியை இறைதூதர் என்ற நிலைக்குமேல் உயர்த்துகிறார் என்பதே அதற்குப் பொருள். அவ்வாறு செய்கின்றவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுப்பவரும் அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை அவமதிப்பவருமேயாவார். அத்தகைய ஒருவராகவே நஜாத் ஆசிரியர் காணப்படுகிறார்.

"உமக்கு முன்னர் நாம் எந்த மனிதருக்கும் நீண்ட கால வாழ்வு அளிக்கவில்லை. (முஹம்மது நபியே) நீர் மரணித்து இவர்கள் நெடுங்காலம் வாழ்வதா?" (21:25)

என இறைவன் கேட்கிறான். ஆனால் நஜாத் ஆசிரியரோ மானமும், வெட்கமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மரணித்திருக்க ஈசா நபி இன்னும் உயிரோடு இருப்பதாக வாதிடுகிறார். இப்படி வாதிடுபவர்கள் ஒரு வேளை கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக இருக்கவேண்டும்.

நாம் இதனை மிகைப்படுத்திக் கூறவில்லை. நமக்கு எழுந்துள்ள சந்தேகம் நியாயமானதுதான். நஜாத் ஆசிரியர் இது குறித்து எழுதியிருப்பதை நீங்கள் படித்தல் உங்களுக்கும் அந்த சந்தேகம் எழும். அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"தூதர்களில் சிலரைச் சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறோம்." என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்றெல்லா நபி மார்களையும் விட எல்லா விஷயங்களிலும் உயர்த்தியிருப்பதாகச் சொல்லவில்லை. "

இதிலிருந்து நஜாத் ஆசிரியரின் ஈமானில் கோளாறு உள்ளதை உணரலாம். அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் விட எல்லாவகையிலும் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல அந்த மானபியை முழுமையாகப் பின்பற்றிய மக்கள் எல்லா மக்களையும் விட உயர்ந்தவர்கள் என்பதையும் திருக்குர்ஆன் தெளிவு படுத்தியிருக்கிறது. கீழ்வருவன அதற்க்கு சான்றுகளாகும்.

காத்தமுன் முன்னபிய்யீன் - எல்லா நபிமார்களையும் விடச் சிறந்தவர்கள்- (சூரா அஹ்சாப்)

யாசீன் - தலைவரே -(சூரா யாசீன்)

புகழக்கூடிய இடத்துக்கு உரியவர் (மக்காமே மஹ்மூத்) - (சூரா பனி இஸ்ராயீல்)

உலக முழுவதிற்கும் ஒரு அருட்கொடை (சூரா அன்பியா)

உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட ஒரே இறைத்தூதர். (சூரா அக்ராப்)

இவ்வாறெல்லாம் நபி(ஸல்) அவர்களை மேன்மைப் படுத்திக் கூறியுள்ளபோது இந்த மேதாவி அதிலும் சந்தேகத்தைக் கிளப்புகிறார். இவர்கள் தான் மக்களை ஆலிம்களாக்குகிறவர்களா?

ஈசா (அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்-1


தமிழக முஸ்லிம்களிடையே சிலர், தம்மை தௌஹீது வாதிகள் என்றும், திருக்குர்ஆன், ஹதீஸ் இவற்றின் அடிப்படையில் மட்டுமே மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களென்றும் பறை சாற்றி சிறிது மதிப்பு பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் தாமும் அதே குழப்பக்கார குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அது மட்டுமன்று, இவர்களை, ஏனைய ஆலிம்சாக்களிலிருந்து மாறுபட்டவர்களாக, மார்க்க மேதைகளாக கருதிவந்த மார்க்கப்பற்றுள்ள இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இவர்கள் தமது பத்தாம் பசலித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

அந்-நஜாத் நவம்பர் இதழில் வெளியான 'ஈசா (அலை) மரணிக்கவில்லை, ஆயினும் மரணிப்பவர்களே' என்ற கட்டுரை இதனை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஈசா (அலை) அவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் உள்ளார்கள் என்ற மூடநம்பிக்கை மட்டுமல்லாது, கற்பாறைக்குள்லிருந்து நிறை சூல் ஒட்டகம் வெளிவந்து குட்டி ஈன்றது. மூசா நபி காலத்தில் இறந்தவன் உயிர்பெற்றான், அதுவும் மாட்டின் அங்கத்தினால் அடிபட்டதும் உயிர்பெற்றான். (மாட்டையே அக்கால மக்கள் வழிபட்டனர். அந்த மாடு ஒருவனை உயிர்பித்தது என்கிறார்களோ என்னவோ). குகைவாசிகளின் உயிர் கைப்பற்றப்பட்டு முன்னூறு ஆண்டுகள் தூங்கினர் என்பன போன்ற 'கஸ்ஷுல் அன்பியா' கட்டுக் கதைகளை ஏற்பதில் இவர்கள் ஏனைய முல்லாக்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் மேற்கண்ட கட்டுரையில் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

இவற்றிக்கெல்லாம் மேலாக, இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளனரா என்ற சந்தேகத்தை இவர்களின் வாசகர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, "உலகத்தில் நபி(ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதருக்கும், கொடுக்கப்படாத சில தனிச் சிறப்புகளை ஈசா நபி (அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள். என்று திருக்குரானே சான்று பகர்கின்றது" என்று இவர்கள் வரைந்துள்ளதைக் கூறலாம். இன்னும் கொஞ்ச நாள் சென்றால், "திருக்குரானை விட ஏனைய நூற்களை விட பைபிள் தனிச் சிறப்புகளை உடையது" (நவூதுபில்லாஹ்) எனக்கூசாமல் இந்த "மாமேதைகள்" கூறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு ஒரு வாசகர்வட்டமும் ஒரு புரவலர் கூட்டமும் முஸ்லிம்களிடையே இருப்பது எத்துனை வேதனைக்குரியது!

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் திருக்குரானை ஓதி அதன் வசனங்களைச் சிந்தித்து உணராததேயாகும். அல்லாஹ்வின் அந்த அருள்மறை

அபலா தஹ்கிலூன்

அபலா ததபக்கரூன்

அபலா ததப்பரூன்

என்றெல்லாம் கூறி அதன் வசனங்களை சிந்தித்து அது கூறும் உண்மைகளை உணரவேண்டுமென எடுத்துரைக்கிறது.

ஆனால், 'சுன்னத்வல் ஜமாஅத்' எனத் தங்களைக் கூறிக் கொள்ளுபவர்களைச் சார்ந்த ஆலிம்சாக்களாகட்டும், நஜாத், ஜன்னத் இவற்றின் மெத்த படித்த ஆலிம்சாக்களாகட்டும் இதனை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை! இத்தகையவர்களை குறித்தே திருக்குர்ஆன்,

'அவர்களின் பெரும்பாலானவர்கள் ஊகங்களையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக ஊகங்கள் உண்மைகெதிராக எந்தப் பயனும் அளிப்பதில்லை . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (10:37)

அதுமட்டுமன்று, திருக்குரானை புரிந்து கொள்வதற்கு அரபி மொழியறிவு மட்டும் இருந்தால் போதாது. 'தக்வா' என்னும் இறையச்சம் இன்றியமையாதது. இதனையும் திருக்குரானே எடுத்துரைக்கிறது. (2:3)

நஜாத் ஆசிரியரோ படு சுத்தம்! இவரிடம் 'தக்குவாவும்' இல்லை அரபி மொழியறிவும் இல்லை. இவருக்கு இறையச்சமிருந்தால் மேற்கண்ட கட்டுரையில் நம்மை ஏளனம் செய்து எள்ளி நகையாடி இருக்கமாட்டார். நயவஞ்சகர்கள் என்றும் வழிகேடர் என்றும் நம்மீது வசைபாடி இருக்கமாட்டார்.

இவருடைய ஏளனத்திற்கும், ஏச்சுகளுக்கும், அவதூறுகளுக்கும் நீண்ட மறுப்புகள் எழுதப்போவதில்லை. மாறாக இவருடைய ஏளனத்திற்கு,

"அவர்களுடைய ஏளனம் அவர்களையே சூழ்ந்துகொள்ளும்" (6:11)

என்ற திருக்குர்ஆன் வசனத்தையே பதிலாகாக் கூறுகின்றோம். இவருடைய வசைமொழிகளை,

"எனது துக்கத்தையும், வேதனையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்". (12:87)

என்ற திருமறை வசனத்திற்கேற்ப இறைவனிடமே விட்டுவிடுகிறோம். அவதூறுகளுக்கு,

"லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்"

"பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

என்ற ஒரே பதிலை கூறுகின்றோம்.

நஜாத் ஆசிரியருக்கு அரபி மொழியறிவு இருந்தால் மேற்கண்ட கட்டுரையில், அர்த்த மற்ற உளறல்களை நிச்சயமாக தவிர்த்திருப்பார். அவருக்கு அரபி மொழியறிவு இல்லை என்பது ஊரறிந்த விஷயம், ஏன் அதனை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார் நஜாத் அக்டோபர் இதழில்! ஆனால் அவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கும் அந்த ஆலிம்சா பெருந்தகையினருக்கும் அறபி மொழியறிவு இல்லை போலிருக்கிறது. அந்த மண்குதிரையை நம்பி இவர் ஆற்றில் இறங்கியிருக்க வேண்டாம், ஆழம் தெரியாது காலை விட்டு அவதிப்பட்டிருக்கவும் வேண்டாம்.

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூறுகின்றானாம். ஆலு இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், " அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் "என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." நஜாத் ஆசிரியர் அதே கதைக்கு "ஈசா நபி அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டார்கள்" என்று வேறு தலைப்பு தருகிறார். மிகக் கெட்டிக்காரத்தனமாக எழுதிவிட்டதாக எண்ணம் அவருக்கு

ஈசா நபியைப் பற்றி அவர்கள் அல்லாஹ்வால் கைப்பற்றப்பட்டார்கள் (ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள்) மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் (மீண்டும் பூமியில்) வாழ்வார்கள் என்றெல்லாம் நஜாத் ஆசிரியர் வரைந்துள்ளார். (பக்கம் 8)

ஆனால் இவையெல்லாம் அவருடைய ஊகங்களே. அவருடைய கட்டுரை நெடுகிலும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று அவருடைய ஊஹங்களை எடுத்துவிடுகிறார். இந்த லட்சணத்தில் இவர், "காதியானிகள் நம்மவர்களின் ஊகங்களையும் சுய கருத்துக்களையும் எளிதாக முறியடித்து வெற்றிவாகை சூடிக்கொள்கின்றனர்." (பக்கம் 5) என ஏனைய ஆலிம்சாக்களை சாடுகின்றார்.

திருக்குர்ஆன் நபி மொழி இவற்றை அறிந்து திட்டவட்டமாகக் கூறுவதை விட்டு வெறும் ஊகங்களையும் கற்பனைகளையும் அவிழ்த்து விடுபவர்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

"வெறும் ஊகங்களையே அன்றி உண்மையை அவர்கள் பின்பற்றுவதில்லை. கற்பனையிலேயே அவர்கள் மூழ்கி இருக்கின்றனர்." (6:117)

"வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின் பற்றுவதில்லை. அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே." (10:67)

"அவர்களுக்கு இதைப்பற்றிய எவ்வித அறிவுமில்லை. அவர்கள் வீண் கற்பனை செய்பவர்களேயன்றி வேறில்லை.(43:21)

"ஈசா நபி உயிருடன் வானத்தில் உள்ளார்" என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் திருக்குரானில் இருந்து காட்டுங்கள் என்று சமாதான வழி இதழ் மூலமாக கேட்கப்பட்டது. பல ஆதாரங்கள் தந்துள்ளதாக நஜாத் ஆசிரியர் பீற்றிக் கொண்டுள்ளாரே தவிர ஈசா நபி உயிருடன் இருப்பதைத் தெரிவிக்கும் ஒரு ஆதாரத்தையும் அவர் தரவில்லை.

இந்த விஷயம் பற்றி இதுவரை அஹ்மதியா ஜமாத்துடன் வாதம் செய்த ஆலிம்சாக்கள் பாடிய அதே பல்லவியைத் தான் நஜாத் ஆசிரியரும் பாடி இருக்கிறார். ராகம் தான் சற்று வித்தியாசப்படுகிறது. இப்பிரச்சனை தோன்றிய நாள் முதல் இந்த ஆலிம்சாக்கள் எந்த ஆயத்தை தமது கட்டுக்கதைக்கு ஆதாரமாகக் கூறி இருந்தார்களோ அந்த ஆயத்தையே நஜாத் ஆசிரியரும் தமது ஆதாரமாக் முதலில் எடுத்து வைக்கிறார். (பக்கம் 8) இந்த ஆயத்தில் அவர் கூறும் அர்த்தப்படிப் பார்த்தால் கூட ஈசா நபி இயற்கையாக மரணித்துப் போகவில்லை என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஈசாவைக் கொன்றுவிட்டோம் என்ற யூதர்களின் வாதத்தை மறுத்து இறைவன் அவர்கள் அவரை கொல்லவில்லை என்று கூறியுள்ளானே தவிர அவர் இயற்கையாக இறந்தே போக வில்லை என்று கூறவில்லையே! அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டதாக இறைவன் கூறியிருப்பது எந்த வகையில் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஆகும்? இறைவனளவில் போகின்றவர்களெல்லாம் உயிருடனா போகிறார்கள்?

நஜாத் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனத்தின் சரியான பொருளை கீழே தருகின்றோம்.

"அல்லாஹ்வின் தூதர், மர்யமின் மகனான ஈசா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள்(யூதர்கள்) கூறுகின்றனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவில்லை. ஆயினும் அவர் அவ்வாறு (சிலுவையிலிடப்பட்டவர் போன்று) தோற்றமளிக்குமாறு செய்யப்பட்டது. இதில் கருத்து வேடுபாடு உள்ளவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு ஊகத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களேயொழிய அது பற்றிய திட்டவட்டமான அறிவு அவர்களுக்கில்லை. அவர்கள் அவரை உறுதியாக கொலை செய்யவேயில்லை.

இதற்க்கு மாற்றமாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான். மேலும் அல்லாஹ் வல்லமையுள்ளவனும், அறிவுள்ளவனுமாவான். (4:158,159)

ஈசா நபி மரணிக்காது உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு இந்தத் திருவசனத்தில் என்ன சான்று உள்ளது என்பதை நஜாத் ஆசிரியர் கூறவேயில்லை. அதைவிடுத்து ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டார்களா இல்லையா, அடிக்கப்பட்டது ஈசா நபியா வேறொரு நபரா? என்பன போன்ற வாதத்திற்கு வாசகர்களைத் திசைத் திருப்புகிறார்.

இதற்காக ஆறு பக்கங்களை (பக்கம் 9 முதல் 14 வரை) செலவிட்டுள்ள இவர், இவருடைய கூற்றுக்கு உருப்படியான எந்த ஆதாரத்தையும் தராது சிலுவை சம்பவம் பற்றிய நமது கருத்துக்களை மறுக்கவும் நையாண்டி செய்யவும் முற்படுகிறார்.

முதலில் ஈசா நபி (அலை) அவர்கள் ஏனைய மக்களைப் போன்று மரணிக்கவில்லை என்பதற்கு இவர் ஆதாரம் தரவேண்டும்! அப்படி ஆதாரம் காட்டாத நிலையிலேயே இவர். ஈசா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். என்ற வசனத்தை எடுத்துக்காட்டி அதற்க்கு ஈசா நபி உடலுடனும், உயிருடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார் என்று பொருள் தருகிறார்.

ஆனால், 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற சொற்றொடருக்கு உயிருடனும், உடலுடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார்கள் என்று பொருள் கொள்வதைவிட அபத்தம் வேறில்லை! ஈசா (அலை) எங்கிருந்து எங்கு உயர்த்தப்பட்டார்? அல்லாஹ் அளவிலென்றால் அல்லாஹ் உயரத்தில் உள்ளானா? 'சுவிசேஷகர் மாற்கு' (பைபிள் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களில் ஒருவர்) கூறி இருப்பது போன்று ஈசா நபி "பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்" என நஜாத் ஆசிரியரும் கூற விழைகிறாரோ என்னவோ ! இப்படியே போனால் பாதிரி அப்துல்லா ஆத்தமைப் போன்று பாதிரி அப்துல் ஹக் போன்று இவரும் பாதிரி அபூ அப்துல்லா, ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை! ஆனாலும் நம்முடைய இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் அவ்வாறு ஆக மாட்டார் என நம்புவோம்.

"பல் ரப அவுல்லாஹு இலைஹி "அன்ற சொற்றோடரிலுள்ள 'ரபா ஆ' என்ற வினைச்சொல் அல்லாஹ்வை எழுவாயாகக் கொண்டு வரும்போது அதற்க்கு, ஆன்மீகமான உயர்த்துதல் என்று மட்டுமே பொருள் தரயியலும். மாறாக உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளும் தரலாம் என்பதற்கு எந்த எடுத்துக்காட்டையும் யாராலும் தர இயலாது. அத்தகையதொரு அர்த்தம் அந்தச் சொல்லுக்கு உள்ளது எனக்கூறும் நஜாத் ஆசிரியர், அதற்க்கான எடுத்துக்காட்டை திருக்குரானின் ஏனைய ஆயத்துக்கள், ஹதீஸ்கள், இப்பிரச்சனை எழுவதற்கு முன்னால் எழுதப்பட்ட தப்சீர்கள், அகராதிகள் இவற்றிலிருந்து காட்டவேண்டும்.

மனிதன் செயப்படு பொருளாகவும் அல்லாஹ் எழுவாயாகவும் கொண்ட ஒரு வசனத்திற்கு 'ரபா ஆ' என்ற பயனிலை வருமேயானால் அதற்க்கு ஆன்மீக உயர்த்துதல் என்ற ஒரே அர்த்தமே திருக்குரானிலும், ஹதீஸ்களிலும், இலக்கண நூல்களிலும், தப்சீர்களிலும் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக:-

திருக்குர்ஆன் வசனங்கள்:

"நாம் விரும்பியிருந்தால் அவரை (பல் அம்பாவூர் என்பவரை) உயர்த்தியிருப்போம். !" (7:176)

"அல்லாஹ் உங்களிடையேயுள்ள நம்பிக்கையாளர்களை உயர்த்துவான்." (58:11)

"நாம் அவரை (இத்ரீஸ் நபியை) மேலான, உயர்ந்த ஓர் இடத்திற்கு உயர்த்தினோம்." (9:58)

இந்தத் திருமறை வசனங்களில் எல்லாம் உள்ள 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு ஆன்மீகமான உயர்த்துதல் என்பதே பொருளாக தப்சீர்களில் தரப்பட்டுள்ளது.

நபிமொழிகள்

"ஓர் இறையடியார் பணிவை மேற்கொண்டால் இறைவன் அவரை ஏழாவது வானத்திற்கு உயர்த்திவிடுவான் ! (கன்சுல் உம்மால் பாகம் 7 பக்கம் 68)

"அல்லாஹ் சில சமுதாயங்களை இந்தத் திருக்குர்ஆன் வாயிலாக உயர்த்துகிறான். சிலரை தரம் தாழ்த்தவும் செய்கின்றான். (கன்சுல் உம்மால் பாகம் 1 பக்கம் 29)

இந்த நபிமொழிகளிலும் 'உயர்த்துதல் என்ற சொல் ஆன்மீக உயர்த்துதல் என்ற' பொருளிலேயே கூறப்பட்டுள்ளது.

தப்சீர் நூல்கள்

"அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை தன்னிடத்திற்கு அழைத்து தன்னளவில் உயர்த்தினான்." (தப்சீர் ஸாபி பக்கம் 113)

'ராபியுக்க இலய' என்ற வாக்கிற்கு உமது நற்செயல்களை என்னளவில் உயர்த்துவேன் என்பதே பொருளாகும். மேலும் நான் உமக்கு உயர்ந்த பதவியைத் தந்தருளுவேன் என்பதுமாகும். (தப்சீர் கபீர் அல்லாமா ராஸி பாகம் 2 பக்கம்691)

அகராதிகள்

எதனையாவது அணுகச் செய்வதற்கு 'ரபா ஆ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. - ஸிஹாஹ் ஜவ்ஹரி

அரசரிடத்து உயர்த்தப்படுதல் என்பது அரசருக்கு நெருக்கமானவன் என்பதே- அக்ரபுல் மவாரித்

ரபாஆ என்பது இழிவுபடுத்துதல் என்பதன் எதிர்ச்சொல் ஆகும். - தாஜுல் உரூஸ்

அர்ராபி- உயர்த்துகின்றவன் என்ற இறைவனின் குணப்பெயருக்கு நம்பிக்கையாளர்களுக்கு மீட்பளிப்பவன். இறைநேசர்களுக்கு தன்னை அடையும் வாய்ப்பினை வழங்குபவன் என்றெல்லாம் பொருள் படும். - லிஸானுள் அரப்

இவற்றிலிருந்தெல்லாம் ரபா ஆ என்பதற்கு ஆன்மீகமாக உயர்த்துதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் தரயியலாது என திட்டவட்டமாக புலனாகிறது. இனி "இலைஹி" என்ற சொல்லை கவனிப்போம்.

இறைவனளவில் உயத்துதல் என்பது சடப் பொருளான உடல் இறைவனிடம் செல்வது எனப் பொருள்படாது. ஏனெனில் இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லை. இது குறித்து திருக்குர்ஆன்.

அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் இருக்கின்றான். (6:4)

நீங்கள் எங்கெல்லாம் இருக்கின்றீர்களோ அங்கெல்லாம் அல்லாஹ் இருக்கின்றான். (2:115)

நாம் மனிதனுடன் அவனது உயிர்நாடிக்கருகே இருக்கின்றோம். (50:16)

என்றெல்லாம் கூறுகின்றது. இவற்றிலிருந்து இறைவனளவில் உயர்த்தப்படுதல் என்பதற்கு இறைவனிடத்திற்கு உடல் உயர்த்தப்பட்டது என்று எவ்வாகையிலும் பொருள்கொள்ள இயலாது என்பதயும், அப்படி பொருள் கொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை என்பதையும் உணரலாம்.

ஈசா நபி (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாக கூறி இருப்பது அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு எவ்வகையிலும் சான்றாக அமையாததைப் போலவே அவர்கள் கொல்லப்படவோ சிலுவையில் அறைந்து கொல்லப்படவோ இல்லை என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அமையாது. ஒருவர் சிலுவையில் அறையுண்டோ அல்லது வேறுவிதமாகவோ கொல்லப்படவில்லை. என்று கூறப்பட்டால். அவர் பின்னர் இயற்கையாகக் கூட இறக்கவே இல்லை என்பது அதன் பொருளன்று. மாறாக, அகால மரணம் அல்லது ஆபத்தான மரணம் அவருக்கு நேரவில்லை என்பது மட்டுமே அதற்குப் பொருள்.

மேற்கண்ட திருமறை வசனத்திலுள்ள 'வமகத்தலூஹு வமா சலபூஹூ' என்று இருப்பதை வெட்டிக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை என்று திரித்துக் கூறுவதாக நஜாத் ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். அதன் பின்னர் அவரே கத்தல் என்பதற்கு வெட்டப்படுவது என்று பொருள் கூறிவிடுகிறார். இதிலிருந்து இவருடைய அரைவேக்காட்டுத் தனத்தை புரிந்துகொள்ளலாம்.

'சலபு' என்பதற்கு சிலுவையில் அறையப்படவில்லை என இவர் கூறும் பொருளே தவறானது. அஸ்ஸல்ப என்பதற்கு 'அல் கித்லத்துள் மக்ருபத்து' அதாவது சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்ற பொருளே லிஸானுல் அரப், தாஜுல் உரூஸ் ஆகிய அரபி மொழி அகராதிகளில் தரப்பட்டுள்ளது.

திருக்குரானின் பிற இடங்களில் காணப்படும் இச்சொல் நாம் சொல்லும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதர்களுடனும் போர் செய்தும் பூமியில் குழப்பம் செய்தும் கொண்டும் இருப்பவர்களுக்குரிய தண்டனை 'அன்யுகத்தலு'- அவர்கள் வெட்டப் படவேண்டும் அல்லது யுஸல்லபு - அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டும். (5:34)

இந்த ஆயத்திலுள்ள 'யுஸல்லபூ' என்பதற்கு சிலுவையில் வெறுமே ஏற்றி வைப்பது என்று பொருள்கொள்ளயியலாது. மூஸா நபியின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜால வித்தைக்காரர்களை நோக்கி, 'லா உஸல்லி பன்னகும்' 'நான் உங்களை சிலுவையில் அறைந்து கொல்லுவேன்' என்று பிர்அவ்ன் கூறியதாக வருகிறது 20:72. இங்கும் சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்று பொருள்படும் வண்ணமே இவ்வசனம் அமையப் பெற்றுள்ளது.

சுருக்கமாக 'சலபூ' என்ற சொல் ஆங்கிலத்தில் Hanged என்ற சொல்லைப் போன்றது. Hanged என்றால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுதல் என்று பொருள்படும். அதுபோன்று சலபூ என்பதற்கு சிலுவையிலிடுதல் சிலுவையிலறைந்து கொல்லுதல் என்பதே பொருளாகும். எனவே வமா சலபூஹூ என்பதற்கு சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று பொருள் கொள்வதே மிகச் சரியானது.

'இறைவனளவில் உயர்த்தப்படுதல்' என்பது உடலுடன் உயர்த்தப்படுவது அன்று என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 'வமா சலபூ' என்பதற்கு நஜாத் ஆசிரியர் கூறுவது போன்று சிலுவையில் அறையப்படவேயில்லை என்று வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அது கூட ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்க்குச் சான்றாகாது. சிலுவையிலிருந்து தப்புகின்ற ஒருவருக்கு மரணமே இல்லையா என்ன?

வெறும் குதர்க்கவாதம் செய்தும், நம்முடைய சான்றுகளை ஊகங்களால் மறுத்தும், தமது மூடநம்பிக்கையை நிலை நிறுத்தி விடலாம் என நஜாத் ஆசிரியர் கனவு காண்கிறார்.

'சாகடிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டவனை மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதாக எண்ணி எந்தப் புத்திசாலியும் அவனை சிலுவையிலிருந்து இறக்கிவிடமாட்டான்' என ஓரிடத்தில் குறிப்பிடும் இவர், ஈசா நபிக்கு பகரமாக வேறொருவனை அதிகாரிகள் சிலுவையில் அறைந்தனர் என இன்னொரு இடத்தில் கூறுகிறார். இவர் குறிப்பிடும் செயல் மட்டும் புத்திசாலித்தனம் ஆகிவிடுமா?

சிலுவையில் அறையப்பட்ட ஈசா நபி அதில் இறந்து விட்டதாகக் கருதி அதிலிருந்து இறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஈசா நபிக்கு பகரமாக வேறொருவர் சிலுவையில் அறையப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. காலமெல்லாம் தம்மோடு வாழ்ந்திருந்த ஈசா நபியை யூதர்களுக்குத் தெரியாதா என்ன? ஈசா நபியை சிலுவையில் அறைந்த கொல்ல வேண்டும் என்று வெறியோடு அலைந்த யூதர்கள் அவருக்கு பகரமாக வேறொருவன் அறையப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று கூறுவதை விட அபத்தம் வேறில்லை.

இப்படியெல்லாம் சிலுவை சம்பவத்தை போஸ்ட்மார்டம் செய்யும் நஜாத ஆசிரியர் ஒரு விஷயத்தை சிந்திக்க தவறிவிட்டார். நபிமார்களில் பலரை அவர்களின் எதிரிகள் கொன்றுவிட முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரையுமே இறைவன் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லை. அதுதான் போகட்டும் அவனுடைய நபிமார்களில் ஏன் மக்களில் தலை சிறந்தவர்களும் அவனுடைய அன்பிற்கும், நேசத்திற்கும் ஏனைய எல்லோரையும் விட மிக உயர்ந்தவர்களான அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் உயிருக்கு பல முறை அபாயம் நேரிட்டிருக்கிறது.

அத்தகு தருணங்களில் கூட இறைவன் அவர்களைத் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லையே! இவ்வாறிருக்க ஈசா நபியை மட்டும் அவன் எவ்வாறு உயர்த்திக் காப்பாற்றி இருப்பான்? இஸ்ரவேல் மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட ஈசா நபியை தன்னளவில் உயர்த்த வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு அளித்த பணியை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவிபுரிவதல்லவா அவனுடைய கடமை!

ஈசா நபி வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள் என்பதும் இறைவனளவில் உயர்த்தப்பட்டார்கள் என்பதும் உண்மையில் பரமேறுதல் என்ற கிருஸ்தவ நம்பிக்கையின் மறுபதிப்பேயாகும். இதனை நாம் மட்டும் கூறவில்லை. இஸ்லாமிய நல்லறிஞ்சர்கள் பலரும் இவ்வாறே கூறியிருக்கிறார்கள். "பத்தஹுல் பயான் என்னும் நூலில் இரண்டாம் பாகத்தில் நாற்பத்தி ஒன்பதாம் பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது.

"ஈசா நபி முப்பத்து மூன்றாவது வயதில் உயர்த்தப்பட்டார்கள் என்று கூறப்படுவதில் நம்பக்கூடிய சான்று எதுவுமில்லையென்று ஹாபிலிப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது 'ஸாதுல் மா ஆத்' எனும் நூலில் வரைந்துள்ளார்கள். இது கிறிஸ்தவர்களிடமிருந்து வந்த ஒரு கொள்கை என ஷாமி என்பவர் கூறுவது உண்மையே."

ஈசா நபிக்கு இறைவன், நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரையும் விட சிறப்பளித்தான் (நவூதுபில்லாஹ்) அவர்களைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் கூறி கிறிஸ்தவக் கொள்கைக்கு ஊட்டம் தருகிறார் 'நஜாத்' ஆசிரியர். இதற்குத்தான் இவர் தமது பத்திரிகைக்கு 'நஜாத்' - இரட்சிப்பு எனப்பெயர் வைத்தார் போலும்! இவர், இவர் பின்னால் போகின்றவர்களை 'ஆலிம்களாக்குகிறேன்' என்று சொல்லி கிறிஸ்தவர்களாக்கிவிடுவார் போலிருக்கிறது. இறைவன் காப்பாற்றுவானாக!